வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
முன்னதாக, Ulchi Freedom Shield என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சற்று முன்பாக, பயிற்சியின் அளவை “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான நல்லுறவு மற்றும் ஈரான் போரில் தென்கொரியா தனக்கு ஆதரவு அளிக்க மறுத்தமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருந்தார்.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முயற்சியை வடகொரிய ஜனாதிபதியின் சகோதரியான கிம் யோ ஜோங் (Kim Yo Jong) புதனன்று நிராகரித்தார்.
“பயிற்சியின் கால அளவையோ அல்லது அளவையோ குறைப்பதால் மட்டும் அதன் தூண்டும் மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மை மாறிவிடாது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டுப் பயிற்சியை ஆக்கிரமிப்புக்கான ஒத்திகையாகப் பார்க்கும் வடகொரியா, தனது முந்தைய எச்சரிக்கையின்படி, கடலை நோக்கி சுமார் 10 குறுந்தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்துத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தது.
எனினும், இந்த ஏவுகணைச் சோதனைகள் அமெரிக்கப் பகுதிகளுக்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்கப் பசிபிக் கட்டளையகம், பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தது.
