மலையக பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய மே தினத்தில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளன. செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன மே தின கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்தந்த கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கட்சி மே தினக் கூட்டங்களையோ கொண்டாட்டங்களையோ நடத்தாமல், அதற்குப் பதிலாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை எதிர்காலத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த மே தினத்தில் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் மாறாக தோட்டங்களுக்குள் சமய நிகழ்வுகளை நடத்துவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ. பி. சக்திவேல் கூறினார். தேசிய தொழிலாளர் சங்கம் இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் தோட்டங்களில் சிறு கொண்டாட்டங்களை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிராந்திய பணிப்பாளர் என். ஆர். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
