இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கம்பன் ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.
இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.
அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செந்தில் தொண்டமான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:
1. OCI வீசாவை (Overseas Citizen of India) பெறுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த பலரால் அதனைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, பெருந்தோட்ட மக்களுக்காக விசேட சலுகை வழங்கி, OCI அட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
2. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை சேவைகளுக்காக அரச மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருப்பதால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்திய மருத்துவக் காப்புறுதி திட்டமான “ஆயுஷ்மான் பாரத் – காப்புறுதி திட்டத்தின் பயனை லங்கா LIC ஊடாக வழங்கி, தேவையானபோது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
3. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்துமாறும் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.










