சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழு, இன்று (03) மஹர சிறைச்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறைச்சாலை வளாகம், தீக்கிரையாக்கப்பட்டுள்ள பகுதிகள், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை குறித்த குழுவினர் கண்காணிக்க உள்ளனர்.
அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் தனித்தனியாக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சம்பவம் குறித்தான தகவல்களை விசாரணை அதிகாரிகள் திரட்டவுள்ளனர்.
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் முழுமையானதொரு அறிக்கையை முன்வைப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியால் ஐவரடங்கிய குழுவொன்று கடந்த 30 ஆம் திகதி அமைக்கப்பட்டது. இக்குழு ஒருவாரத்துக்குள் இடைக்கால அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இக்குழுவில்நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா,நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ரோஹண ஹபுகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு பதிலாக புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.