மியன்மாரில் வார இறுதியில் ராணுவத்தினர் நடத்திய ஆகாய வழித் தாக்குதலில் 3 வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
கடந்த சனிக்கிழமை இரவு காரேன் மாநிலத்தில் புரட்சிப்படையினர் ராணுவத்தளம் ஒன்றைக் கைப்பற்றியதால் அங்கு ஆகாய வழித் தாக்குதல் நடத்தியது மியன்மார் ராணுவம்.
தாய்லந்து எல்லைக்கு அருகே நடந்த அந்தத் தாக்குதலில் சிறுவன் இருந்த குடிசை தரைமட்டமானது. சம்பவத்தில் சிறுவனின் 27 வயதுத் தந்தை சம்பவ இடத்திலேயே மாண்டார்.
சிறுவன் தந்தையின் மடியில் உட்கார்ந்திருந்ததாகவும், சிறுவன் உடலில் சில கண்ணாடிச் சில்லுகள் பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.தற்போது சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
சிறுவனுக்கு அவரது தாய் துணையாக உள்ளதாகத் தொண்டூழிய அமைப்பு கூறியது.
இரண்டு நாள்களாக ஆகாயவழித் தாக்குதல் நடந்ததால் காரேன் மாநிலத்தில் உள்ள சுமார் 3,000 பேர் காடுகளையும் நதிகளையும்
தாண்டி தாய்லந்திற்குத் தப்பிச்சென்றனர்.
மியன்மாரில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 500 -க்கும் மேற்பட்டோர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
மியன்மாரில், சென்ற மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டும் என்றும் அரசாங்க ஆலோசகரான திருவாட்டி ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.
ராணுவத்தின் அடக்குமுறையை ஐக்கிய நாட்டு நிறுவனமும் உலக நாடுகளும் கண்டித்துள்ளன.










