தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் – என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாதிகளை நினைவுகூரவே மாவீரர் தினம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் எம்.பிக்கள் சிலரும் ஆதரவு வழங்கியுள்ளனர். நாட்டை பிளவுபடுத்தவே பயங்கரவாதிகள் முற்பட்டனர். படையினர் தமது உயிர்களை தியாகம் செய்தனர். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை. தமிழர்களும் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
யாழ். கோப்பாயில் சிறார்களுக்கு புலிகளின் சீருடை அணிவிக்கப்பட்டு, கழுத்தில் சயனைட்டும் மாற்றப்பட்டு நிகழ்வில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள மக்கள் தொடர்பில் சிறார்களுக்கு சிறு வயதில் இருந்தே குரோத்தையும், வைராக்கியத்தையும் விதைத்துவருகின்றனர்.
ஒற்றையாட்சியை பாதுகாப்போம். ஈழம் அமைவதற்கு உடலில் உயிர் உள்ளவரை, தேசப்பற்றுள்ள மக்கள் வாழும்வரை ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்கள் வெளிநாடு செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்களின் குடும்பத்தை போர் நடக்கும் இடத்துக்கு அனுப்ப வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.” – – என்றார்.










