பாடசாலையில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படுவதற்கு தனது பாட்டியுடன் சென்ற ஆறு வயது நிரம்பிய மாணவன், அவ்வழியில்வந்த லொறியில் மோதி, பலியான பெருந்துயர் சம்பவமொன்று, (இன்று) 15-02-2021 காலை 8.00 மணியளவில் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
இச்சிறுவன் பதுளை அரசின் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதும், சிறுவன் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பதுளை – சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்திற்கு செல்லும் பதுளை தேவாலய வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை அசேல புரையைச்சேர்ந்த சிவனேசன் வருண் பிரதீஸ் என்ற ஆறு வயது நிரம்பிய சிறுவனே, விபத்தில் பலியானவராவார்.
பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆண்டுஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனின் பாட்டி, தனது பேரனை கூட்டிச்சென்றுள்ளார். மேற்படி வித்தியாலயத்தை அண்மித்தவேளையில் எதிர்த்திசையில் வேகமாகவந்த லொரிபாட்டியையும், சிறுவனையும் மோதித்தள்ளிச்சென்றது.
இவ்விபத்தில் சிறுவன்ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படு காயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து, பதுளை பொலிசார் ஸ்தலவிசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறி சாரதியை கைதுசெய்து, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில்வைக்க உத்தரவிட்டார்.
எம். செல்வராஜா, பதுளை