ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜனாதிபதி மாவட்டம் தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி ஹங்குராங்கெத்த, வலப்பனை, கந்தபளை, நுவரெலியா, கொத்மலை, தலவாக்கலை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா, ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக நுவரெலியா தொகுதியை மையப்படுத்தி முத்தையா பிரபுவால் பிரச்சாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு அங்கு வந்திருந்த ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மக்களுடன் சிநேகப்பூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துக்கொண்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.