60 நாள் போர் நிறுத்த பேச்சு தோல்வி அடைந்தால் இஸ்ரேல் , காசா மீது போர் நடவடிக்கைகளை தொடங்கக் கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சு தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இது குறித்து, அமெரிக்காவிலிருந்து அவர் வெளியிட்டுள்ள காணொளில்,
” ஈரானுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வருகை. மீதமுள்ள பிணைக்கைதிகளை மீட்டெடுக்கவும், ஹமாஸின் ராணுவ கட்டமைப்பை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது 60 நாள் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக, உயிருடன் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இறந்த பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகப் பெரிய சாதனைகளைப் பெற்றுள்ளோம். ராஜதந்திரம் வேலை செய்யவில்லை என்றால் ராணுவ பலத்தின் மூலம் செயல்பட விரும்புகிறோம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
காசாவிற்கு அவசரமாகத் தேவையான உணவு மற்றும் எரிபொருளை அனுமதிக்க இஸ்ரேலுடன் ஐரோப்பிய அதிகாரிகள் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் அறிவித்தார்.
இதற்கிடையே, மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த 10 குழந்தைகளும், ஐந்து பெரியவர்களும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.