இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் எதிர்வரும் மே மாதத்துக்கு பிறகு நியமிக்கப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இ.தொ.காவின் தலைமைப்பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.
தொண்டமானின் மறைவின் பின்னர் தலைமைத்துவம் தொடர்பில் இ.தொ.காவுக்குள் மோதல் ஏற்பட்டது. கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காக தலைவர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமானுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் தேசியசபைக்கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில தடவைகள் தேசியசபை கூடியும் தலைவர் நியமிக்கப்படவில்லை. 10 மாதங்கள் கடந்துள்ளன.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து எதிர்வரும் மே மாதத்துடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. அதன்பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படக்கூடும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
