மொட்டு கட்சியுடனான உறவை முறித்துகொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம் – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எம்மை இணைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் எமக்கு இல்லை. நாட்டில் பிரதான அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்கும் எந்த தேவைப்பாடும் எமக்கு கிடையாது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பில் இருந்த பிரச்சினை காரணமாகவே வெளியேறி நாம் சஜித் பிரேமதாச தலைமையில் தனிக்கட்சி அமைத்தோம். வெற்றியை நோக்கி எமது கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எம்முடன் கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகளும் முன்வந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு சஜித் பிரேமதாச தலைமையில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வந்தால் அது பற்றி பேச்சு நடத்தலாம்.” -என்றார்.

 

Related Articles

Latest Articles