மொட்டு கட்சி ரணிலை ஆதரித்தால் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாகவே அமையும் – என்று புளொட்சி அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளரை சுமந்திரன் எதிர்த்தாலும், ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே சிறிதரன் இருக்கின்றார் எனவும் அவர் கூறினார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்துள்ளதா?

பதில் – ஆம்.

கேள்வி – முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் நீங்கள் எப்படி போட்டியிடுவீர்கள்?

பதில் – புதிய கூட்டணியின்கீழ் போட்டியிடுவோம்.

கேள்வி – அப்படியானால் இம்முறை தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடமாட்டீர்களா?

பதில் – எமக்கு அதில் விருப்பம் இல்லை.

நாடாளுமன்றத்தில் எமது பக்கம் நால்வர் உள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு ஐவர் உள்ளனர். எனினும், எம்மிடம் கலந்துரையாடமல் தேசியப்பட்டியலை நியமித்தனர். இது தவறு,

கேள்வி – தமிழரசுக் கட்சியும் உடைந்துள்ளதா?

பதில் – உத்தியோகப்பூர்வமாக அல்லாவிட்டாலும் அக்கட்சிக்குள் கருத்து மோதல் உள்ளது.

கேள்வி – முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சிதான் பிரதானக் கட்சி, இது பற்ற அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லையே?

பதில் – தமிழ் பொதுவேட்பாளருக்கு சுமந்திரன் எதிர்ப்பு. ஆனால் சிறிதரன் விருப்பம்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்களா?

பதில் – சற்று கடினம்தான்.

கேள்வி – சஜித், அநுர ஆகியோரில் தமிழ் மக்கள் மத்தியில் யாருக்கு கூடுதல் செல்வாக்கு உள்ளது?

பதில் – சஜித் பிரேமதாச.

Related Articles

Latest Articles