மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! மன்னிப்பு கோருவாரா விமல்?

ராஜபக்சக்களுக்காக அரசியல் புராணம்பாடி, இனவாதம் கக்கி வாக்கு- வேட்டை நடத்துவதில் சிறப்பு தேர்ச்சிப்பெற்ற விமல் வீரவன்சவுக்கு அரசியலில் சோதனைக்காலம் ஆரம்பமாகியுள்ளது.

ராஜபக்சக்களுக்காக பல பத்தாயிரம் அரசியல் மேடைகளில் அனல்கக்க உரையாற்றிய விமல், அதே ராஜபக்சக்கள் குறித்து கதைக்கபோய்  அரசியல் பொறிக்குள் சிக்கியுள்ளார்.

நாலாபுறங்களில் இருந்தும் அவருக்கு எதிராக மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் சொற்கணைகளையும், விமர்சனக்கணைகளையும் தொடுத்தனர், தொடுக்கின்றனர். இந்நிலையில் விமலும் அவரின் சகாக்களும் , இவற்றுக்கு பதிலடி கொடுக்க ஆளுங்கூட்டணிக்குள் சிறு அரசியல் பூகம்பமே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சம்பந்தன் ஐயா தும்மினால்கூட அது சர்வதேச சதி எனவும், ஈழத்தை அடைவதற்கான மறைமுக வியூகம் எனவும் கை ,கால், மூக்கு எல்லாம் வைத்து கற்பனை கலந்த தொனியில் உரையாற்றி சிங்கள மக்களை குஷிப்படுத்தும் விமல், தான் எதை பேசினாலும் எதிர்ப்பதற்கு எவரும் இல்லை என்ற அகங்காரத்துடனேயே செயற்பட்டார்.அதே நினைப்பில்தான் மொட்டு கட்சியின் தலைமைப்பதவி குறித்தும்  கருத்து வெளியிட்டார்.  அதுவே விமலுக்கு தற்போது வேட்டாக மாறியுள்ளது.

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய ராஜபக்சவை நியமிக்கவேண்டும்.” – என்பதே விமல் வெளியிட்டிருந்த கருத்தின் சுருக்கம். இதுவே அவருக்கு கெடுபலன்களை வழங்கிவருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையம் விவகாரத்தில் விமல்மீது கடும் அதிருப்தியில் இருந்த மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு, இக்கருத்து அவர்மீது தாக்குதல் தொடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாக  அமைந்தது. குறிப்பாக பஸில் அணி உறுப்பினர்கள் நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் விமலை வெளுத்து வாங்கினர். கருத்தை மீளப்பெறவேண்டும், மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தனர். விமலின் வண்டவாளங்களை தண்டவாளமும் ஏற்றினர்.

பதிலுக்கு விமலுக்கு சார்பானவர்களும் மொட்டு கட்சி உறுப்பினர்களை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமல்ல இந்த மோதலால் சிங்கள தேசியவாத அமைப்புகளும் இரு அணிகளாக பிரிந்தன. அதேநிலை நீடித்தால் சிக்கல் என்பதால் சமரசத்துக்கு செல்வதற்கு இரு தரப்புகளும் முயற்சித்து வருகின்றன. பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சமரசம் பேசப்பட்டாலும், விமல்மீது மொட்டு கட்சி உறுப்பினர்கள் கண்வொன்றை வைத்துள்ளனர், அரச கூட்டணி கட்சிகளை அவர் வளைத்துப்போட்டுள்ளதால் அவற்றை பிரிப்பதற்கான நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. கட்சிகளை உடைத்து, நபர்களை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்துவது பஸிசுக்கு கைவந்தகலை. எனவே, விமலுக்கு இனி சிக்கல்தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

விமல் மன்னிப்புகோரியாக வேண்டும் என்பதில் மொட்டு கட்சி உறுதியாகவே இருக்கின்றது.

தேர்தல் காலத்தில் தீர்மானிக்கும் சக்தி பஸில்அணிதான். எனவே இனிதான் மொட்டு அணிக்குள் மோதல் சூடுபிடிக்கும்.

எஸ்.பிரதா வட்டகொடை

Related Articles

Latest Articles