பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி ஆகிய இரு கட்சிகளின் இணைத் தலைமைகளது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று வைபவரீதியாக இடம்பெற்றது.

எல்ல பிரதேச சபையின் தலைவர் உதய ஜீவ பண்டாரவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை இரு முறை சமர்ப்பிக்கப்படும், அவ்வரவு – செலவுத்திட்டம் இருமுறைகளிலும் தோற்கடிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று பதுளை மாவட்ட உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் மங்கள விஜயநாயக்க தலைமையில் எல்ல பிரதேச சபை கூடி புதிய தலைவரைத் தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக எல்ல பிரதேச சபைத் தலைவராக இருந்த உதய ஜீவ பண்டாரவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக எம்.டி.மாலக்க பிரபாத் சிரிசேனவும், புதிய எல்ல பிரதேச சபைக்காக போட்டியிட்டனர்.
திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் 7 : 13 என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.டி. மாலக்க பிரபாத் சிரிசேன வெற்றி பெற்று, எல்ல பிரதேச சபையின் புதிய தலைராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆறு மேலதிக வாக்குகளினால் அவர் தெரிவானார்.
21 உறுப்பினர்களைக் கொண்ட எல்ல பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏழுபேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து பேரும், சுயேச்சைக்குழு ஒன்றுமாக 13 பேர் எம்.டி. மாலக்க பிரபாத் சிரிசேனவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழுபேர் மட்டும் முன்னால் தலைவர் உதயஜீவ பண்டாரவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனடிப்படையில் 13 உறுப்பினர்களது ஆதரவினைப் பெற்றுள்ளதுடன் ஆறு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் எம்.டி. மாலக்க பிரபாத் சிரிசேன வெற்றிபெற்று, மாவட்ட ஆணையாளர் முன்னிலையில், எல்ல பிரதேச சபைத் தலைவராக சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். புதிய தலைவரின் ஏற்பாட்டில் 2022ம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட அறிக்கை, விரைவில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எல்ல பிரதேச சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மட்டும் தலைவர் தெரிவு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எல்ல பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்த வகையிலான இணைத் தலைமைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்ற முடிவும் எடுக்ப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை










