யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாகப் புலம்பெயர் தமிழர்களிடம் நிதியைப் பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளைத் தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
உதவி தேவைப்படுவோரிடம் நக்கல், நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து அவர் பதிவிட்டு வந்துள்ளார். அதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.
இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டுக்கு இரவு வேளை சென்ற மேற்படி நபர், மாணவியைக் காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்புத் தெரிவிக்கவே காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களைத் தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரி வந்தனர்.
இந்நிலையில், குறித்த காணொளியில் காணப்பட்ட குடும்பத்தினர் பண்டத்தரிப்பு பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களுடன் சமரசம் பேச மேற்படி இளைஞர் தனது சகாக்களுடன் நேற்று சென்ற சமயம், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் யூடியூப்பரையும் அவருடன் சென்ற மூவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் நால்வரையும் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, குறித்த யூடியூபருடன் இணைந்து வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து காணொளி எடுப்போர் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.