யாழில் வீடொன்றிலிருந்து 87 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு எழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் வழிகாட்டலில் சாவகச்சேரி பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த 47 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொடிகாமத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரே தனக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொடிகாமத்தில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டபோது அங்கிருந்து 87.67 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அங்கிருந்து சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாயார் கைதுசெய்யப்பட்டார்.

கைதான இருவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டநிலையில் இருவரையும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles