பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த ரயிலில், 9 வளைவு பாலத்திற்கு அருகாமையில் வைத்தே முற்பகல் 11 மணியளவில் இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
குறித்த ரயிலில் வெள்ளவாய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதி ஒருவரும் எல்ல கரந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் மிதிப்பலகையில் சென்றவேளையிலேயே 21 வயதுடைய இளைஞர் கீழே தவறி விழுந்து, படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இளைஞரை, அதிகாரிகள் ரயிலில் ஏற்றிக் கொண்டுவந்து, எல்ல ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகளில் அவரை உடனடியாக தெமோதர வைத்தியசாலையில் அனுமதித்தனர், அங்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










