ரிஷாத் பதுர்தீன் கட்சியினர் மலையக அரசியல்வாதிகளை கரித்து கொட்டுவதை நிறுத்த வேண்டும்

நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் சிவநேசன்

ரிஷாத் எம்பியை இன்று இந்த அரசாங்கமே சிறையில் வைத்துள்ளது. இந்த அரசாங்கத்தில்தான் இன்று எம்பி ரிஷாத் கட்சியின் மூன்று எம்பீக்கள் அலி சப்ரி, ஹிஷாக், முசாரப் ஆகியோர் இணைந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தலைவனை சிறையில் வைத்திருக்கும் அரசுடன் சேர்ந்து விட்டார்கள். இவர்கள் இருபதாம் திருத்தம், துறைமுக நகர், நம்பிக்கையில்லா பிரேரணை இவற்றுக்கு அரசுக்கு அதரவாக வாக்களித்து பாராளுமன்றத்தில் அரசுடன் அமர்ந்துள்ளார்கள். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ரிஷாத் கட்சி, எதிரணி கூட்டணியில் இல்லை என கூறியுள்ளார்.

எம்பி ரிஷாத் கட்சியான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் சகோதரர் சி. எம். முபித், ஊடகங்களில் மலையக அரசியல்வாதிகளை கரித்து கொட்டியுள்ளார். அவருக்கு இது தொடர்பில் போதிய விளக்கம் இல்லை என தெரிகிறது. சகோதரர் முபித், இதை உடன் நிறுத்த வேண்டும்.

ரிசாத் எம்பி சிறையில் இருப்பதற்கும், சிறுமி ஹிஷாலினி பிரச்சினைக்கும் தொடர்பில்லை. இதை விடுத்து இவர்கள் அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்க வேண்டும். கட்சி மாறி போய் விட்ட தங்கள் கட்சி எம்பீகள் பற்றி பேச வேண்டும். முதலில் உங்கள் கட்சியின் மூன்று எம்பீகளையும், ஜனாதிபதியிடம் சென்று பேசி, ரிசாத் எம்பீயை விடுதலை செய்யும்படி சொல்ல சொல்லுங்கள். அதை அரசு செய்யாவிட்டால், அரசில் இருந்து வெளியேறுவோம் எனவும் சொல்ல சொல்லுங்கள். அப்புறம் மலையகம் தொடர்பில் நீங்கள் பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரேலியா மாவட்ட நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் கூறியுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மேலும் கூறியுள்ளதாவது,

சிறுமி ஹிஷாலினி மர்மமான முறையில் இறந்து விட்டாள். அதை நாம் விசாரிக்க சொல்கிறோம். எங்கள் இனத்தையும், எங்கள் மாவட்டத்தையும் சேர்ந்த ஒரு சிறுமி மர்மமான முறையில் இறந்து போனால் அதை கண்டும் காணாதது போல இருக்க சொல்கிறீர்களா? அந்த சிறுமி இறந்து போனது, ரிசாத் எம்பியின் வீட்டில் ஆகும். ஆகவே அதை பொலிசும், நீதிமன்றமும் விசாரிக்கின்றன. அவர் வீட்டை சேர்ந்தவர்களை முதலில் விசாரிக்காமல், அடுத்த தெருவில் இருப்பவர்களையா விசாரிப்பார்கள்? இது ஒரு வழமையான பொலிஸ், நீதிமன்ற நடவடிக்கை. இதில் என்ன பிழை இருக்கிறது?

குற்றவாளியா, இல்லையா என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும். அது நீதிமன்றத்தின் பொறுப்பும், அதிகாரமும் ஆகும். ஆனால், அதை செய்யும்படி வலியுறுத்தி மலைநாட்டில், வடக்கில், கிழக்கில், கொழும்பில் என நாடு முழுக்க இளைஞர்கள், பெண்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இதில் என்ன தவறு? உண்மையில் அரசியல் கட்சிகளை விட சாதாரண பொது மக்களே அதிகமமாக போராடுகிறார்கள்.

ஜனாசா எரிப்பு தொடர்பில் வழக்கு நடந்த போது, முஸ்லிம் மக்களை தெருக்களில் இறக்கி போராட்டங்கள் நடத்தப்படவில்லையா? அதில் எமது கட்சி தலைவர்களும் கலந்துக்கொள்ள வில்லையா? நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும் என நீங்கள் சும்மா இருக்கவில்லையே? இப்போதும் ரிஷாத் எம்பி மீது ஏதோ காரணம் சொல்லி அரசாங்கம் சிறையில் வைத்து, பொலிஸ் விசாரணை நடத்தும் போது, நீங்கள் அவரை விடுதலை செய்யுங்கள் என போராட வில்லையா? எமது தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஆகியோரும் ரிஷாத் எம்பீயை விடுதலை செய்க என குரல் எழுப்ப வில்லையா?

சிறுமி ஹிஷாலினி தொடர்பில் நாங்கள் போராடினால், அதை இனவாதம் என்கிறீர்கள். நீங்கள் உங்களுக்காக போராடினால், அதை போராட்டம் என்கிறீர்கள். இது என்ன தம்பி நியாயம்? உங்களுக்கு ஒரு சட்டம். எங்களுக்கு ஒரு சட்டமா? புனித இஸ்லாம் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை உணருங்கள்.

எமது கூட்டணி கட்சி தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் ஒருபோதும் ரிஷாத் எம்பியை குற்றம் சாட்டவில்லை. ரிஷாத் எம்பியை நண்பராக அல்லவா இவர்கள் கருதுகிறார்கள். நமது தலைவர்கள் நீதி விசாரணைக்காக மட்டுமே குரல் எழுப்பினர். மேலும் இந்த பிரச்சினை, தமிழ், முஸ்லிம் பிரச்சினை இல்லை என்றும் மிக தெளிவாக பாராளுமன்றத்திலேயே கூறியுள்ளனர். இதைவிட என்ன செய்ய முடியும்? உண்மையில் இன்று இந்த பிரச்சினையை இனவாதமாக மாற்ற முயல்வதே நீங்கள்தான். இதற்கு இனவாத சாயம் பூசுவதே நீங்கள்தான்.

உங்கள் தலைவரை சிறையில் வைத்திருக்கும் அரசாங்கத்துடன், உங்கள் கட்சி எம்பிக்கள், இணைந்துவிட்ட கசப்பான உண்மையை மறைக்க முடியாத, உங்களது இயலாமை காரணமாகவே, மலையக தலைவர்களை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள் என நல்ல உள்ளம் கொண்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு புரிகிறது என நான் நம்புகிறேன். ஆகவே இந்த கூச்சலை நிறுத்தி உண்மையை உணருங்கள். தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை சிதைக்காதீர்கள்.

Related Articles

Latest Articles