லாவோஸில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கிய 7 பேரில் 5 பேர் மீட்பு!

லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகை ஒன்றிற்குள், கடந்த மே 20 ஆம் திகதி 7 பேர் சென்றுள்ளனர்.

அப்போது பெய்த கனமழையால் குகையின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால்பந்து அணியினரை வெற்றிகரமாக மீட்ட தாய்லாந்து மீட்புக் குழுவினர், இந்த மீட்புப் பணியிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் இணைந்த அவர்கள், குகைக்குள் இருந்த 15 மீட்டர் நீளமுள்ள அடைப்புகளை அகற்றி, மக்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பகுதியை நோக்கித் தீவிரமாக முன்னேறினர்.

தீவிர முயற்சிக்குப் பின், குகைக்குள் சிக்கியிருந்த 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் வியன்டியானில் (Vientiane) இருந்து வடக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கரடுமுரடான, தொலைதூரப் பகுதியில் இந்தக் குகை அமைந்துள்ளது.

கடினமான மலைப் பிரதேசம் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணியில் பெரும் சவால்களை எதிர்கொண்டதாகப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles