வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது .
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ராஜரட்னம் சதுர்சன் (வயது – 15) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, பாடசாலை மைதானத்தில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் பகல் 1.30 மணியளவில் வகுப்பறைக்கு திரும்பிய குறித்த மாணவர், மேசைமீது ஏறி, பாய்ந்து விளையாடியுள்ளார்.
இதன்போது வகுப்பறையில் இயங்கிக்கொண்டிருந்த மின் விசிறியில் அவரின் தலை பகுதிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவன் வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு மணிநேரத்துக்கு பின்னரே கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதிக இரத்தபோக்கே மரணத்துக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
புசல்லாவை பவன்










