வடக்கில் 150 உறுப்பினர்கள்: என்பிபிக்கு பின்னடைவு இல்லை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆளும் தரப்பு 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளது.

மன்னார், வவுனியா , யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி சிறந்த முறையில் வெற்றிப்பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் பெரும்பான்மை பலத்தை ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 81 உறுப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பிரதேச சபை ஆசனம் கூட கிடைக்கப்பெறவில்லை. ஆகவே வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கட்சிகளே உள்ளன. இவ்வாறான நிலையிலும் தேசிய மக்கள் சக்தி அங்கும் வெற்றிப்பெற்றுள்ளது.

தேசிய அரசியலுக்கும், பிரதேச அரசியலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய அரசியலில் வெற்றிப்பெற்றதை போன்று, பிரதேச அரசியலிலும் நாங்கள் வெற்றிப்பெற்றுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி தேசிய மக்கள் சக்தி வகுத்த திட்டங்கள் இந்த பெறுபேற்றின் ஊடாக வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Related Articles

Latest Articles