வடக்கு, கிழக்கில் இன்று (27) முன்னெடுக்கப்படும் கடையடைப்பு போராட்டத்துக்கு மலையகத்திலுள்ள மூன்று பிரதான கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.
மனோக கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
அக்கூட்டணியின் பிரதித் தலைவர் பதவியை வகிக்கும் இராதாகிருஷ்ணனே, தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு முற்போக்கு கூட்டணியின் ஆதரவை நேற்று (27) தமிழ் பத்திரிகையொன்றிடம் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” நினைவேந்தல் நடத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அக்கோரிக்கை உட்பட மேலும் சில விடயங்களை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாமும் முழு ஆதரவு வழங்குகின்றோம்.
மலையகத்தில் கடைகளை அடைத்து, போராட்டம் நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளபோதிலும் அவர்களின் நிலைப்பாட்டுடன், கோரிக்கைகளுடன் நாம் ஒத்துப்போகின்றோம். களத்துக்கு சென்று ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அறவழியிலான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். எமது ஆதரவு என்றும் இருக்கும். ” – என்றார்.