பாரியளவில் வரி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை எதிர்காலத்தில் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அறவிடப்பட வேண்டிய வரியை துரிதமாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் கணக்காய்வாளர் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன இங்கு தெரிவித்தார்.
உள்நாட்டு வருமான வரி தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்துள்ளதாகவும், அவற்றை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு நீதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியன இணைந்து வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
வரி நிலுவைச் சட்டத்தை விரைவில் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எச்.எம்.சி. பண்டார குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுடன், அதற்கான யோசனையை விரைவில் வழங்குமாறு குழுவின் தவிசாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு அறிவித்தார்.










