வாகன இறக்குமதி; ஆராய விசேட குழு நியமனம்

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேற்படி திட்டத்தை தயாரிப்பதற்காக நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் கொள்கை திணைக்களம், மத்திய வங்கி, வாகனங்களை இறக்குமதி செய்யும் இரு குழுக்களின் பிரதிநிதிகள், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு உள்ளிட்ட வாகன இறக்குமதியுடன் தொடர்பு படும் அனைத்து குழுக்களையும் உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி விவகாரங்களின் வழிகாட்டியாகத் திகழும் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு நிதி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கத்தை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வரைவை சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வரைவுக்கு அமைய பொதுப் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட முறையின் கீழ் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles