பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
கண்டி தெல்தெனிய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இந்த சவாலை விடுத்தார்.
” எனக்கு பொருளாதாரம் தொடர்பான அறிவில்லை என்று பிரதமர் விமர்சித்துள்ளார். பரவாயில்லை, அவரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். அவ்விவாதத்தின்போது பொருளாதாரம் பற்றி கலந்துரையாடலாம்.” – என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றின்போதும் மேற்படி சவாலை சஜித் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.