வீடு கட்ட 20 பேர்ச்சஸ் காணி – விவசாயத்துக்கு 2 ஏக்கர்! ஹட்டனில் போராட்டம்!!

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் ஹட்டனில் இன்று (21.06.2022) காணி தினம் நடைபெற்றது.

இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ´நிலமற்றோருக்கான நிலம்´ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இவ் ஊர்வலம் அட்டன் மல்லிகைப்பூ சந்தியில் ஆரம்பித்து அட்டன் சாரதா கலாசார மண்டபம் வரை சென்றன.

வீடு கட்ட 20 பேர்ச் காணி கொடு, வீட்டுடன் விவசாய காணி கொடு, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தில் சென்றனர்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்கு மலையகத்தில் குறிப்பாக தெனியாய, மாத்தளை, பதுளை, நுவரெலியா போன்ற பகுதிகளை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

“மலையக மக்களின் கௌரவமான வாழ்வுக்கும், வாழ்வாதாரத்திற்குமான காணி உரிமையினை உறுதிசெய்வதன் மூலம் எமது தேசத்தின் அபிவிருத்தியை பலப்படுத்தி நாட்டின் தேசிய நீரோட்டத்தில் பங்கு கொள்வதை உறுதி செய்வோம்” என இதன்போது போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles