வீட்டுத் திட்டத்துக்கு 10 பேர்ச்சஸ் காணி – ஜீவனுக்கு நன்றி தெரிவிப்பு

” பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட 07 பேர்ச்சஸ் காணிக்கு பதிலாக 10 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கண்டி மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 7 பேர்ச்சஸ் காணியே ஒதுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் குறித்த அளவை அதிகரித்துக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எமது தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் ஐயா மேற்கொண்டிருந்தார். அவரின் மறைவுக்கு பின்னர் இத்திட்டத்தை நிறுத்தாது, உரிய தரப்புகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்து இன்று எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி உரிமை கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

அவரின் கோரிக்கையின் பிரகாரமே பிரதமரால் இதற்கான அமைச்சரவைப்பத்திரம் முன்வைக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏனைய சமூகத்தினருக்கு இணையாக காணி உரிமையும் வாழும் சூழ்நிலை எமது மக்களுக்கும் கிடைத்துள்ளது. எனவே, இதற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய எமது இராஜாங்க அமைச்சருக்கு கண்டி மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனி மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத் திட்டத்துக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்பது உறுதி. எமது கண்டி மாவட்ட மக்களுக்கும் இது பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்படும் எமது செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணம் மென்மேலும் வெற்றியளிக்க வாழ்த்துகளையும் கண்டி மாவட்ட மக்களின் சார்பில் சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles