“39 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் பாராளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசி ஜனநாயகத்தை அழித்ததைப் போன்று, இன்று 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முற்பட்டு வருகின்றது.”- என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18.08.2026) எழுப்பிய கேள்வி.
தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்பினர் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்கள் இவற்றில் அடங்குகின்றனர். இத்தரப்பினரால் எழுப்பப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு பின்வரும் கேள்விகளை நான் சமர்ப்பிக்கிறேன்.
01. 2025.12.31 ஆம் திகதி வரை இந்நாட்டின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாமல் நிலுவையில் காணப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை நீதிமன்றப் படிநிலைக்கு ஏற்ப தனித்தனியாக குறிப்பிடுவீர்களா?
02. மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டுவது யாதெனில், நீதிமன்றத்தின் சுயாதீனம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்றத்தின் உண்மையான சுதந்திரத்தின் மீது மாத்திரம் தங்கியிருப்பதில்லை, மாறாக அது எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி பொதுமக்களின் பார்வைக்குத் புலப்படுவதிலும் தங்கியுள்ளது என்பதும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது அந்தச் சுதந்திரத்தையே அடிவேரோடு பிடுங்கி எறிவதற்கு வழிவகுக்கும் என்பதுமாகும். அரசாங்கம் இக்கருத்துடன் உடன்படுகின்றதா? இல்லையெனில், அது ஏன்?
03. ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டுவது யாதெனில், இதனால் நன்மையடையும் நீதிபதிகளே இத்திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மையை 121 ஆவது பிரிவின் கீழ் தீர்மானிக்க வேண்டிய ஏற்படும் போது, அதற்குள் conflict of interest ஒன்று ஏற்படுவதற்கான ஆபத்து எழுவதாகும். அரசாங்கம் இக்கருத்துடன் உடன்படுகிறதா? இல்லையெனில், அது ஏன்?
04. பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் (CLA) சுட்டிக்காட்டுவது யாதெனில், அரசியலமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியைத் திருத்துவது அதன் போற்றத்தக்க தன்மைக்கு பங்கம் விளைவிக்கலாம் என்றும், இத்தகைய சீர்திருத்தத்திற்கு முன்னர் போதுமான பொது மக்கள் மற்றும் உரிய பங்குதாரர்களின் கலந்தாலோசனை அவசியமானது என்பதுமாகும். அரசாங்கம் இக்கருத்துடன் உடன்படுகிறதா? இல்லையெனில், அது ஏன்?
05. LAWASIA அமைப்பின் பிரகாரம், இப்பரிந்துரையானது போதுமான ஆரம்ப முதற்கட்ட பொது மக்கள் கலந்தாய்வுகள் மற்றும் ஆலோசனைகள் இன்றி திடீரெனக் கொண்டுவரப்படும் ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாகத் தோன்றுவதற்கான அபாயம் உள்ளதாகவும், இது நீதிமன்றங்கள் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையைக் கலைக்க கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் இக்கருத்துடன் உடன்படுகிறதா? இல்லையெனில், அது ஏன்?
06. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) சுட்டிக்காட்டுவது யாதெனில், உச்ச நீதிமன்றமே தனது 2022 SC SD 64/71-2022 விசேட தீர்ப்பில், தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றியமைப்பது தொடர்பான எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன், மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமெனக் குறிப்பிடும் 3 ஆவது பிரிவையும் மீறும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளதாகும். அரசாங்கம் இக்கருத்துடன் உடன்படுகிறதா? இல்லையெனில், அது ஏன்?
07. பிரான்சின் தேசிய சட்டத்தரணிகள் பேரவையால் (CNB) 2026 ஜூலை 3 ஆம் திகதி நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம், இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையே சட்டம் மற்றும் நீதித்து துறைகளில் முன்னேற்றம் கண்டு வரும் இருதரப்பு தொழில்சார் ஒத்துழைப்புகளுக்கு, குறிப்பாக சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு இடையேயான உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்ற திட்டங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் இந்த நிலைமை குறித்து உடன்படுகிறதா? இல்லையெனில், அது ஏன்?
08. இந்நாட்டின் நீதிமன்ற நீதிபதிகளின் வயதை நீடிப்பதன் மூலம் வழக்கு நடவடிக்கைகளில் விரைவு ஏற்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக காணப்படுகின்றதா? அல்லது அது தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீடு எத்தகையது?










