இலங்கை – கொழும்பில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற இந்து சமுத்திர வளைய அமைப்பின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் பேரவை மாநாட்டிலும், சிரேஸ்ட அதிகாரிகளின் 25ஆவது நிர்வாகசபை அமர்விலும் இந்தியா பங்கேற்றுள்ளது. இம்மாநாடுகளில் கலந்துகொண்ட இந்திய பேராளர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் அவர்கள் தலைமைதாங்கியிருந்தார்.
2. இம்மாநாட்டில் 2023-25 காலப்பகுதிக்கான IORA துணைத் தலைமைத்துவத்தையும் 2025-27க்கான தலைமைத்துவத்தையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக IORA சிரேஸ்ட அதிகாரிகள் 2022-27 காலப்பகுதிக்கான எதிர்கால மற்றும் தற்போதைய பணிகள் குறித்து மீளாய்வு செய்தனர். தொடர்ந்து IORA தொடர்பான ஏனைய பணிஒழுங்கு ஆவணங்கள் சகிதம் 2030 மற்றும் அதற்கப்பாலான காலப்பகுதிக்கான IORA நோக்கு மற்றும் கொழும்பு பிரகடனம் ஆகியவையும் இந்த அமர்வின்போது அமைச்சர்கள் மட்ட பேரவையினால் ஏற்றுக்கொள்ளபட்டது.
3. 2023இல் இரண்டாவது தடவையாக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள், இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இரு நாடுகளினதும் இருதரப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். 2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது வெளியிடப்பட்ட தொலைநோக்கு அறிக்கையினை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டும் முகமாக, அந்த கொள்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்கள் உள்ளடங்கலாக வர்த்தகம், மக்கள் தொடர்புகள், எரிசக்திப் பங்குடைமை ஆகியவை அடிப்படையிலான தொடர்பாடல்களின் பல்பரிமாணங்களையும் மேலும் வலுவாக்கவேண்டியதன் அவசியம் உள்ளதாக அவர்கள் இணங்கியுள்ளனர். அத்துடன் தொலைநோக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை குறித்த காலக்கெடுவிற்குள் எட்டுவதற்கான முன்னுரிமை நடவடிக்கைகளை துரிதமாக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
4. இந்த விஜயமானது இலங்கையுடன் இந்தியா கொண்டிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் பரந்த வாய்ப்புகளையும் உத்வேகத்தையும் முன்னோக்கி கொண்டுசென்றுள்ளது. அத்துடன் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் 10000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் வீடொன்றினை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையான SLR 1.026 மில்லியனை SLR 2.8 மில்லியனாக அதிகரித்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பை முறைப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்கள் இங்கு பரிமாறப்பட்டன. இவற்றில் 1300 வீடுகள் துரிதமாக நிர்மாணிக்கப்படவுள்ளன. மேலும், குறித்த ஆவணங்கள் பரிமாறப்பட்டதன் ஊடாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நன்கொடை அடிப்படையிலான 9 அபிவிருத்தி திட்டங்களுக்கு 50 வீதம் வரையிலான மேலதிக நிதி ஒதுக்கீட்டினை வழங்குவதன் மூலமாக இத்திட்டங்களை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென இந்திய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
5. மேலும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 126 வீடுகள் இதன்போது மெய்நிகர் மார்க்கமூடு கையளிக்கப்பட்டிருந்தன. அத்துடன் கிராம சக்தி மற்றும் மாதிரி கிராம வீடமைப்பு திட்டங்கள் ஊடாக ஹம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நூறுக்கும் அதிகமான வீடுகளும் மெய்நிகர் மார்க்கமூடாக கையளிக்கப்பட்டிருந்தன.
6. இந்தியா இலங்கை இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் முகமாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரால் சிறப்பு சின்னம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சின்னம் இரு நாடுகளினதும் தேசிய கொடிகளின் வர்ணங்கள், தேசிய இலச்சினைகள் ஆகியவற்றை உள்வாங்கியிருந்த அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, பங்குடமை மற்றும் நெருக்கமான தொடர்புகள் ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
7. இந்த விஜயத்தின் மூலமான மற்றொரு முக்கிய பெறுபேறாக, தேசிய பால்வள அபிவிருத்தி சபை, குஜராத் பால் சந்தைப்படுத்தல் சம்மேளனம் (அமுல்) மற்றும் இலங்கையின் கார்கில்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் கூட்டு வர்த்தக பங்குதாரர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தமையை குறிப்பிடமுடியும். இந்த உடன்படிக்கையானது இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது கைச்சாத்திடபட்ட கூட்டு பிரகடன நோக்கிற்கு அமைவாக, இந்தியாவின் அனுபவங்களை பயன்படுத்துவதன் மூலம் குறித்த துறையில் இலங்கை தன்னிறைவடைவதனை இலக்காகக் கொண்டுள்ளது.