பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதாக்களான ‘ஹரக்கட்டா’, ‘குடுசலிது’ ஆகியோரை தப்பிக்கவைப்பதற்காக குற்ற புலனாய்வு திணைக்களம்மீது ‘கொரில்லா’ தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என தகவல் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான தாக்குதல் திட்டத்தை வகுத்த முன்னாள் கொமாண்டோக்கள் இருவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி இரு சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்குள் நுழைந்து ‘இரசாயன’ தாக்குதலை நடத்தி அவர்களை மீட்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்தது எனவும், கொமாண்டோ உடையில் சிஐடிக்குள் நுழைந்தே தாக்குதல் நடத்தப்படவிருந்தது எனவும் இவர்கள் கூறியுள்ளனர் தெரியவருகின்றது.
சிஐடி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு தரப்புகள்மீதும் தாக்குதல் நடத்திவிட்டு, ‘ஹரக்கட்டா’, ‘குடு சலிது’ ஆகிய இருவருக்கும் கொமாண்டோ ஆடை அணிவித்துவிட்டே அவர்களை மீட்டு செல்ல வியூகம் வகுக்கப்பட்டுள்ளது எனவும், இதற்காக கொமாண்டோ பயிற்சி பெற்றவர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சிஐடியினர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலிக கமகே, சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொமாண்டோக்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. சிஐடி திணைக்களத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘ஹரக்கட்டா’, ‘குடுசலிது’ ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்களின் சட்டத்தரணிகள் மனுவொன்றின் ஊடாக, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரையும் மீட்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது என தகவல் வெளியாகியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










