ஹிஷாலினியின் உடல் நாளை மீள தோண்டி எடுக்கப்படுகிறது

டயகம சிறுமி ஹிஷாலினியின் உடல் நாளை காலை மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், ஹிஷாலினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் பூதவுடலை தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று விடயங்களை தெளிவூட்டிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி லுஷிகா குமாரி ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹிஷாலினியின் பூதவுடலை தோண்டி எடுத்து, இரண்டாவது தடவையாகவும் பிரேத பரிசோதனைகளை நடத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பூதவுடலை தோண்டி எடுத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஹிஷாலினியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பகுதியில் தற்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிஷாலினியின் பூதவுடல், நாளை தோண்டி எடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Related Articles

Latest Articles