அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 10 மாவட்டங்களில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 45 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 817 வீடுகள் பகுதியளவும், 14 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் 72 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 5 மரணங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 மரணங்களும், கம்பஹா மாவட்டத்தில் இரு மரணங்களும், புத்தளம், புத்தளம், களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளன.










