1000 ரூபா இல்லையேல் சந்தாவை நிறுத்துவோம் – தொழிலாளர்கள் எச்சரிக்கை

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாவிட்டால் தொழிற்சங்கங்களுக்கான சந்தாப்பணத்தை நிறுத்துவதற்கு இம்முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி பகுதிகளில் உள்ள எமது செய்தியாளர்கள் தொழிலாளர்களிடம் கலந்துரையாடியபோதே அவர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம் வருமாறு,

” அடிப்படை நாட் சம்பளமாக நாம் ஆயிரம் ரூபா கோரும்போது, அதில் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு கம்பனிகள் தயாரில்லை எனக்கூறப்படுகின்றது. அடிப்படை சம்பள விடயத்தில் தொழிற்சங்கங்களும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அடிப்படை சம்பளம் உரிய வகையில் அதிகரிக்கப்படாமல் இதர கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக்கூறப்படுவது ஏமாற்று வித்தையாகும்.

தொழிற்சங்கங்கள் பேரம்பேசி, எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எமக்காக பேரம்பேசமுடியாத தொழிற்சங்கங்கள் எதற்கு? அவற்றுக்கு செலுத்தப்படும் சந்தாவை நிறுத்துவோம். இதன்மூலம் குறைந்தபட்ச எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அதன்பின்னர் தக்கபாடம் புகட்டப்படும்.

ஆயிரம் ரூபா வழங்காவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவம் பறிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வருமா, அதற்கான அழுத்தங்களை தொழிற்சங்கங்கள் பிரயோகிக்குமா என்பதனை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ” -என்றனர்.

Related Articles

Latest Articles