இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் ஜப்பானின் ஆதரவு தொடரும்!
ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (04) அலரி மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பு இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கும் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகவும், ஜப்பானின் ஆதரவு குறித்தும் பிரதமர் நன்றி தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பாடசாலை மட்டத்திலான தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிப்படைத்தன்மையான ஆட்சி, பொறுப்புக் கூறல் மற்றும் சுற்றுச்சூழலை நிலையாகப் பேணுவதில் மக்களின் ஆதரவு என்பன தொடர்பாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலுக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டாவுடன் (Akio Isomata) ஜப்பானின் உயர் அதிகாரிகள் குழுவினரும், இலங்கை சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்ரி உட்பட உயர் அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.