” அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை இல்லாதொழிப்பதற்காகவே இந்த இனவாத அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன், அக்கரபத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்கின்றோம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தாருங்கள் என ராஜபக்ச ஒருவர் கோரியுள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சக்களிடம் மூன்றிலிரண்டு பலம் இருந்தது. அப்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. தற்போது வாக்குகளுக்காக போலி அறிவிப்புகளை விடுக்கின்றனர்.
அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இந்த இனத்துவேச அரசாங்கம் கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை புரிந்துகொள்வோம்.
மொட்டுக்கு வாக்கித்தால் குடும்ப ஆட்சியே மலரும். ஜனநாயக ஆட்சி வேண்டுமானால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.” – என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.










