“13” ஐ முழுமையாக அமுலாக்கும் முயற்சியை கைவிடுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர் கோரிக்கை

” 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளடக்கப்படாத புதியதொரு அரசமைப்புக்கே நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, 13 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.” – என்று பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மன்னர் ஆட்சியில்கூட நாடு பிளவுபடுவதை ஏற்புடைய நடவடிக்கையாக ஏற்கப்படவில்லை. மகாசங்கத்தினரும் ஒற்றையாட்சிக்காகவே மன்னர்களை பாதுகாத்தனர்.

தற்போது நாட்டை பிளவுபடுத்தாமல் ரணிலுக்கு நித்திரை வரவில்லையெனில், அவருக்கு ஒரு வாய்ப்பை நாம் வழங்குகின்றோம். அதாவது ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவும். 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்க ஆணை தாருங்கள் என மக்களிடம் கேட்கட்டும்.

பொலிஸ் அதிகாரம் பற்றி பேசப்படுகின்றது, அவ்வாறு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், குருந்தூர் மலை விவகாரத்தின்போது பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் அல்லவா?

எமக்கு ஐக்கிய இலங்கை அல்ல ஒற்றையாட்சியே முக்கியம். தாய் நாட்டுக்கு கடன் இல்லாமல் தமது இறுதிமூச்சை விடுவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் இதற்காக ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆணை இல்லை. அவர் இந்த பணியை கைவிட வேண்டும், கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஆணையில்தான் ரணில் இருக்கின்றார். 13 இல்லாத புதிய அரசமைப்புக்காகவே கோட்டாவுக்கு மக்கள் ஆணை வழங்கினர்.” – என்றார்.

Related Articles

Latest Articles