” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும். மாகாணசபைகளுக்கு அதிஉச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான காணொளிமூல கலந்துரையாடல் கடந்த (26) நடைபெற்றது. இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கவேண்டியது அவசியம் என பாரத பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
” 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் மாகாணசபை முறைமையை உருவாக்குவதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.எனவேதா
வடக்கு, கிழக்கில் நிலவிய போர்சூழலை முடிவுக்குகொண்டுவந்து அரசியல் தீர்வாகவே மாகாணசபைமுறைமை உருவாக்கப்பட்டது.அது அமுல்படுத்தப்பட்டவிதம் குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.இதன்காரணமாகவே மாகாணசபை முறைமை வேண்டும் என ஒரு தரப்பும், அது அவசியமில்லை என மேலுமொரு தரப்பும் இன்று கருத்து வெளியிட்டுவருகின்றன.
அதேபோல் கடந்த ஈராண்டுகளாக மாகாணசபைகள் இயங்கவில்லை. இதனை பயன்படுத்தியும் மாகாணசபைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற கருத்தாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.
எதுஎப்படியிருந்தாலும் அதிகாரப்பகிர்வு குறித்த எமது கொள்கை மாறவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது.
அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபை முறைமையிலுள்ள சிற்சில குறைப்பாடுகளை சரிசெய்வதற்காக அதனை மீளாய்வுக்குட்படுத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. கடந்தகாலங்களில் இருந்த தடைகள், குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உரிய வகையில் அந்த பொறிமுறை இயங்கவேண்டும்.” – என்றார்.
