திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சுமேதங்கபுர பகுதியில் இன்று காலை நடமாடிய காட்டு யானையொன்று,மேற்படி வயோதிபப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டுச் சேருவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், மேலதிக அவசர சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவர் அவசரமாக மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சேருவில பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










