’19’ என்பது சாபக்கேடு – ’20’ ஐ நிறைவேற்றியே தீருவோம்! ரமேஷ் சூளுரை

கடந்த ஆட்சியின்போது நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முடங்கி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு 19ஆவது திருத்தச்சட்டமே காரணம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஒரு குடும்பத்தை பழிவாங்கவே 19ஐ கொண்டுவந்தார்கள். ஆனால் கடந்த காலங்களை மீட்டுப்பார்த்தால் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை.

யுத்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதிபதியாக இருந்த போது எம் மலையக இளைஞர்கள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது அமரர் ஆறுமுகன் தொண்டமான் இரவோடு இரவாக அவர்களை மீட்டு வந்தார். இதெல்லாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை இருந்ததாலே சாத்தியமானது.

ஜனாதிபதி தேர்தலின்போதுகூட நாட்டை செழிப்படைய வைப்பதற்காகவே 69 லட்சம் வாக்குகளை கொடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை தெரிவு செய்தனர்.மக்களும் 20ஆவது சீர்த்திருத்தத்தையே விரும்புகின்றனர். எனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவோம்.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles