அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசம் அதிகாரங்களை குவிக்கும் விதத்திலான ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ’20’ உள்ள சில சரத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக இரட்டைக்குடியுரிமை தொடர்பில் ஆளுங்கட்சிக்கு சார்பான அமைப்புகள்கூட விசனம் வெளியிட்டுள்ளன. இவ்வாறான விடயங்களை பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது அரசாங்கம் திருத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
செப்டம்பர் மாதத்துக்கான இரண்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றைய தினமே நீதி அமைச்சரால் முதலாம் வாசிப்புக்கென ’20’ சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளை சட்டரீதியாக உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கு சில சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.