அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. 22 ஆம் திகதி இரவு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
20 தொடர்பில் 5 நாட்களாவது விவாதம் அவசியம் என ஆரம்பத்தில் கோரியிருந்த எதிரணி தலைவர்கள் இறுதியில் மூன்று நாட்களாவது நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர். எனினும், இரண்டு நாட்களை மாத்திரமே விவாதத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி 21, 22 நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30வரை விவாதம் நடைபெறவுள்ளது. 22 ஆம் திகதி மாலை முதல் வாக்கெடுப்பு நடத்தப்படும். குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எதிராக வாக்களிக்கவுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சி, எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.