’22’ இற்காக அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார்! நீதி அமைச்சர்!!

நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

19 மைனஸாக அன்றி 19 பிளஸ் ஆகவே 22 ஆவது திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தை விட முன்னேற்றகரமான யோசனையாக இந்த திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு இதனை விட சிறந்த யோசனையொன்றை முன்வைத்து 150 பெரும்பான்மை பலத்தை பெற யாராவது தயார் என்றால் அவருக்கு நீதி அமைச்சு பதவியை கையளித்துவிட்டு செல்ல தயாராக இருப்பதாக நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லாத நிலையில் அனைவரும் புதிய திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிய அவர் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

22 ஆவது திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று நடைபெற்றது இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

150 எம்.பிகளின் ஆதரவு இருந்தாலே 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியும். பொதுஜன பெரமுன எம்.பிகளினதும் ஆதரவை பெறும் வகையில் சில இடைக்கால ஏற்பாடுகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனை விட மாற்றங்கள் செய்து தங்களால் 150 பெரும்பான்மை பெற முடியும் என யாராவது முன்வந்தால் நீதி அமைச்சர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

22 ஆவது திருத்தம் 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கு பிரதமர் ,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவர். ஜனாதிபதியின் பிரதிநிதி, பிரதமரின் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஆகியோரும் இதில் உள்ளடக்கப்படுவர்.

பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து மூவரை தெரிவு செய்யும் யோசனை மாற்றப்பட்டுள்ளது. ஆளும் தரப்பு சார்பில் ஒருவரும் பிரதான எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும் ஏனைய சிறுகட்சிகள் சார்பில் ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சர் தொகை 30 ஜ தாண்டாது போன்ற முக்கிய யோசனைகள் இதில் உள்ளன என்றார்.

22 ஆவது திருத்தமானது 19- என எதிரணிகள் குற்றஞ் சாட்டுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இது 19+ ஆக முன்னோக்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று சுகவினருடன் பேசினேன். அவர்களின் சந்தேகங்களை தீர்த்தேன். தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்த பணி நிறைவடைந்த பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய தெரிவுக் குழு அமைத்து மக்களின் கருத்துக்களை பெற்று இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு குழுவின் பரிந்துரையையும் ஆராய்ந்து புதிய யாப்பிற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவந்து நீக்குவது சாத்தியமானதல்ல. நான் எந்தத் தலைவரையும் பாதுகாக்கும் வகையில் செயற்படவில்லை.அதனால் அனைவரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு பெற சகல கட்சிகளையும் சந்திக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles