அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ச தலைமையில் நேற்றுக் (04) கூடிய நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் வருகை தந்திருந்தவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக பத்தொன்பதாவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களுக்கு அப்பால் இருபத்திரெண்டாம் திருத்தத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய, பத்தொன்பதாவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத விடயமான 41இ உறுப்புரைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் ஜனாதிபதி நியமிப்பார் என்பது முக்கியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்குப் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு சம்பந்தப்பட்ட விடயங்களை வைத்திருப்பதற்கான அதிகாரம் இருபத்திரெண்டாம் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு விடயத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.










