யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!

பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும், யூத சமூகத்தைப் பாதுகாக்க உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில்வாழும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

லண்டன் Golders Green பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதச் செயல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த யூத சமூகத்தை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது என யூத சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், குறித்த “யூத எதிர்ப்புத் தாக்குதல்” முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததுடன், யூதச் சமூகத்தைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles