25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார்.

பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக, இப்புதிய திட்டத்தில் இறால் குஞ்சுகள் நேரடியாக நீர்நிலைகளில் விடப்பட மாட்டாது.

முதலில் நீர்த்தேக்கங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விசேட கூடுகளில் ஒரு மாதம் வரை வளர்க்கப்படும்.

சுமார் 1.5 முதல் 2 அங்குல நீளம் வரை வளர்ந்த பின்னரே அவை நீர்நிலைகளுக்குள் விடுவிக்கப்படும்.

இதன் முதற்கட்டமாக, பிரதான நீர்த்தேக்கங்களை மையப்படுத்தி 25 ஆராய்ச்சி கூடுகள் நிறுவப்பட்டுள்ளன.

இப்புதிய முறையின் நன்மைகள் குறித்துத் தலைவர் மேலும் விளக்குகையில்,

“முன்பு ஒரு கிலோ இறால் அறுவடைக்கு 400 குஞ்சுகள் வரை தேவைப்பட்டன. ஆனால், இந்த கூடு முறை மூலம் வெறும் 100 குஞ்சுகளைக் கொண்டே ஒரு கிலோ அறுவடையைப் பெற முடியும். இது நன்னீர் இறால் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்கும்.” – என்றார்.

கிரித்தலை குளம், அனுராதபுரம் மற்றும் வடக்கு மாகாணக் குளங்களில் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, தனியார் வர்த்தகர்கள் மற்றும் ஊவா, தென் மாகாண சபைகளும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த முன்வந்துள்ளன.

இந்தப் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சல் மூலம் நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், நுகர்வோருக்கு அதிகளவில் இறால்களை விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles