கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்ல, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் அரநாயக்க பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் திருமணமான 45 வயது வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வைத்தியர் இடமாற்றம் பெற்று கடந்த 5 ஆம் திகதியே அரநாயக்க வைத்தியசாலைக்கு வந்துள்ளார் என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரிடமும் சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களை பொலிஸார் பதிவுசெய்துள்ளனர். சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










