நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இன்று (29) தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், கொவிட் 19 நெருக்கடி காரணமாக அடுத்தவாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய நவம்பர் 03 முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படாது. அதேநேரம், நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்காதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊடகப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.










