மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று உபரிநீர் வழித்தடங்கள் இன்று காலை (03) தானாகவே திறக்கப்பட்டுள்ளன என நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காணப்படும் மோசமான மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தால் மீதமுள்ள வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் எனவும் அப்பகுதியில் சென் கிளைய்ர் (St. Clair’s) மற்றும் டெவன் (Devon) நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர் .
கொத்மலை ஓயா நீர்த்தேக்கத்திற்குக் கீழ் பகுதி இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மற்றும் நீர் நிலைகளைப் பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவுறுத்தியுள்ளது.
செ.திவாகரன்










