39 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு
39 வருட காலமாக ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றிவந்த கொட்டகலை நு/ ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. இமெல்டா நவரட்னம் அம்மையார் தனது கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இவர் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
திரு .திருமதி செபமாலை முத்து, எக்னஸ் அம்மா அவர்களின் மகளாக பிறந்து தனது ஆரம்ப கல்வியை இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் பயின்றார்.
தனது இடைநிலை முதல் உயர் கல்வி வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நிறைவு செய்தார்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைத்துறை பட்டதாரியான இவர் 1985 ல் ஆசிரியராக நியமனம் பெற்று நு/ ஒலிருட் தமிழ் வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார்.
1986 இல் அப்பாடசாலையின் கடமை நிறைவேற்று அதிபராக நியமனம் பெற்று 1988 வரை தனியொருவராக பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டார்.
1993 ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையில் உள்வாங்கப்பட்டார். தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகத்தில் பட்ட பின் முகாமைத்துவ டிப்லோமாவை பெற்று கொண்டார். 2002 ல் நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக நியமனம் பெற்று 2006 ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையில தரம் 1 க்கு பதவி உயர்வு பெற்றர்.
15 ஆண்டுகள் நு/ தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக சேவையாற்றி 2017 இல் நு/ கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக இடமாற்றம் பெற்றார்.
2019.09.04 ம் திகதி முதல் நு/ ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக பதவி உயர்வு பெற்றார். அன்று முதல் இன்றுவரை இப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் பாரிய சாதனை புரிந்துள்ளார்.
இவரது காலத்தில் முதல் தடவையாக க.பொ.த.(சா/ த) பரீட்சையில் இரண்டு 9 A சித்திகளும். க.பொ.த. உயர் தரத்தில் 3 A சித்திகளுடன் முதல் முறையாக 4 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலைக்கான பௌதீக வளங்களை அதிகரித்ததோடு சிறந்த மனித நேயமுள்ள நிர்வாகியாக அனைவரினதும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு எமது மலையக சமுதாயத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய அம்மையாரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய பாடசாலைச் சமூகம் வாழ்த்துகின்றது.