மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் 43 குடும்பங்கள், கடந்த 40 நாட்களாக எவ்வித வருமானமும் இன்றி சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் – புரட்மோர் தோட்ட மக்களே இவ்வாறான அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த தோட்டத்தில் நாற்பத்தி மூன்று குடும்பங்களை சேர்ந்த 160 பேர் கடந்த 40 நாட்களாக வேலைக்கு செல்லாத நிலையில் மாத வருமானமும் அற்ற நிலையில் ஒரு வேளை உணவிற்கே வழியின்றி அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அரச பெருந்தோட்ட யாகத்திற்கு சொந்தமாக இருந்த இந்த தோட்டத்தை கடந்த 1886ஆம் ஆண்டு முதல் தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி கடந்த 34 வருடங்களாக அதனை நிர்வாகம் செய்து வந்துள்ளார். இருப்பினும் ஆகஸ்ட் 16ஆம் திகதி அவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்களாக நிர்வாகத்தை நடத்திய போதிலும் தற்போது அவர் தனக்கும் இந்த தோற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மீண்டும் அரசாங்கத்திற்கே தோட்டத்தை உரிமை மாற்றம் செய்ய போவதாகவும் தோட்டத் தொழிலாளர்களிடம் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.
வழமையாக மாத சம்பளம் மற்றும் முற்பணத்தை வழங்கும் தோட்ட நிர்வாகம் இவ்வருடம் தீபாவளி முற்பணததை தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது உரிமையாளர் இவ்வாறான கருத்து தெரிவித்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். ‘
தனக்கு தோட்ட நிர்வாகத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் அதன் அடிப்படையில் மீண்டும் அரசாங்கத்திற்கே தோட்ட காணிகளை பொறுப்பு அளிக்க போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க கடந்த 40 நாட்களாக இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலையை வழங்காத தோட்ட நிர்வாகம் அவர்களின் ஜீவனோபாயம் ஒரு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இத் தோட்டத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலை தூரத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு வகையான சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். ஏனெனில் குறித்த தோட்டத்திற்கு செல்லும் பாதை பல வருடங்களாகவே செப்பனிடப்படாத நிலையில் குண்டர் ம் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தினர்.
பொருளாதார ரீதியில் மாத்திரமன்று பல அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவரை எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது தொழிற்சங்க பிரதிநிதிகளும் முன்வரவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர். எனவே இத்தோட்டம் மக்களின் சம்பளப் பிரச்சினை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் துரிதகதியில் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என இம்மக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றனர.
கௌசல்யா
